India

பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்க ‘நிர்பயா நிதி’யிலிருந்து வெறும் 20% தொகை மட்டுமே செலவு!

பெண்களின் பாதுகாப்பிறக்கு கொண்டுவரப்பட்ட ‘நிர்பயா நிதி’ ஒதுக்கீட்டிலிருந்து, வெறும் 20 சதவிகித அளவிலான தொகை மட்டுமே தற்போதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தலைநகர் புதுதில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற வலுவான குரல் எழுந்தது.

இதனையடுத்து பெண்களின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் கொண்டுவர, மத்திய அரசு, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ரூபாய் வரை தனி நிதி ஒதுக்கீட்டை உருவாக்கியது. இந்த நிதியை பயன்படுத்தி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் (Ministry of Women and Child Development) பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை வகுத்து வந்தது.

இதனையடுத்தது 'நிர்பயா நிதி’ ஒதுக்கீட்டிலிருந்து செலவிடப்பட்ட விவரங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்தவாரம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தின் போது வெளியிட்டார்.

இதன் அடிப்படையில், கடந்த 2018-2019 ஆண்டிற்கு, ரூ. 1,813 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், அதில், மோடி அரசு வெறும் 854 கோடியே 66 லட்சத்தை மட்டுமே ஒதுக்கீடு செய்ததாகவும், இந்த நிதியிலும் ரூ.165 கோடியே 48 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டு இருப்பதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களைத் தடுக்க, ‘நிர்பயா நிதி’யிலிருந்து ஒருபைசா கூட பயன்படுத்தப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என பெண்கள் அமைப்பினர் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.