India

புதுச்சேரி நாராயணசாமி போல திட்டவட்டமாக அறிவிப்பாரா எடப்பாடி பழனிசாமி?

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் புதுச்சேரி அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி மட்டுமின்றி வேதாந்தா நிறுவனத்துக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி அரசின் அனுமதியின்றி திட்டங்களை மேற்கொள்ள முடியாது.

புதுச்சேரி அரசு ஒருபோதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்காது. விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் கருத்து குறித்துப் பேசிய நாராயணசாமி, “கிரண் பேடிக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. தமிழர்களைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆளுநர் பதவிக்கு குந்தகம் விளைவிக்காமல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவிப்பது போல, தமிழக அரசும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இங்கு செயல்படுத்த விடமாட்டோம் என உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசு நெஞ்சுநிமிர்த்தி அப்படி அறிவிக்காது என்பதுதான் தமிழக மக்களுக்கு இப்போதைக்கிருக்கும் சாபம்.