India

குடிநீர் பஞ்சத்தை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை : மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு

வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் தற்போது நிலவி வருகிறது. இது தொடர்பாக சிறப்பு விவாதம் மேற்கொள்ளக் கோரி கடந்த வெள்ளியன்று மக்களவையில் தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இதன் மீது நேற்றைய கேள்வி நேரத்தின்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய மக்களவைக் கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து மக்களவையில் தி.மு.க நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர். பாலு பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, தமிழகத்தின் நீராதாரமாக உள்ள காவிரி, தென்பெண்ணை, அமாரவதி, பாலாறு போன்ற நீர்நிலைகள் வறண்டுவிட்டது. மழையும் பொய்த்துவிட்டதால் மக்கள் குடிநீருக்காக நாள்தோறும் அல்லல்பட்டு வருகின்றனர் என வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளும் வறண்டு காணப்படுகிறது. கடந்த ஆண்டின் மே மாதத்தை விட இந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பாகவே அனைத்து நீர்நிலைகளும் வறண்டுவிட்டது எனவும், மிகவும் மோசமான நிலையே நிலவுகிறது எனவும் கூறினார்.

தற்போது மக்களுக்கான குடிநீர் விநியோகத்திற்கு எந்த வழியும் இல்லை. எனவே ரயில் மூலம் தமிழகத்துக்கான நீர் தேவையை விநியோகிக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.