India

பீகாரை அச்சுறுத்தும் மூளைக் காய்ச்சலால் 131 குழந்தைகள் பரிதாப பலி!

பீகாரில் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 131-ஆக உயர்ந்துள்ளது. முசாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 111 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 20 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிக காய்ச்சல், வலிப்பு மற்றும் தலைவலி போன்றவை மூளைக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹீட்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது.

கடும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, வரும் 24-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறைக்கும், பீகார் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. கடந்த 3 வாரத்தில் மட்டும் 131 குழந்தைகள் பலியாகியுள்ளனர். குழந்தைகளின் இந்த தொடர் மரணத்தால் அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.