India

லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது தெரியுமா?

17வது நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறியுள்ளது.

இந்த நிலையில், சென்ட்ரல் ஃபார் மீடியா ஸ்டடீஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் நடந்து முடிந்த தேர்தல்தான் உலக அளவிலேயே அதிக அளவில் பணம் இறைக்கப்பட்ட தேர்தல் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.

குறிப்பாக ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை குறித்த விவரங்கள் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. சராசரியாக ஒரு வாக்காளருக்கு 700 ரூபாயும், ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. அதிலும் ஒட்டுமொத்தமாக 60,000 கோடி தேர்தலுக்கான செலவிடப்பட்டதில் பா.ஜகவின் பங்கு மட்டும் 45 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.15,000 கோடியாகும். தேர்தல் ஆணையமே தோராயமாக 20% செலவு செய்துள்ளது. அதாவது, 10 முதல் 12 ஆயிரம் கோடி வரை தேர்தல் ஆணையமே செலவிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, அரசியல் களத்தில் பெருகிவரும் குற்றங்களையும், பணப்பட்டுவாடாவையும் தவிர்க்காவிடில் சுதந்திரத்தன்மையையும், ஜனநாயகத்தையும் கட்டாயம் எதிர்ப்பார்க்க முடியாது என கூறியுள்ளார்.