India

60 வயதை கடந்த சிறு வியாபாரிகளுக்கு 3000 ரூபாய் பென்ஷன் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று மாலை டெல்லியில் கூடியது. அதில் பல தரப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுத்த சில முடிவுகளை பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

அதன்படி ஜூன் 17-ம் தேதி மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26-ம் தேதி வரை கூட்டத் தொடர் நீடிக்கும். ஜூலை 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டது. அந்த வரைவின் மீது மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க ஒருமாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

60 வயதைக் கடந்த சிறு வியாபாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவி தொகை வழங்கும் புதிய திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 18-40 வயதுடைய வியாபாரிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் ஜி.எஸ்.டி வரி செல்த்தும் வியாபாரிகள் இந்த திட்டத்துக்கு தகுதி பெறுவார்கள். நாடு முழுவதும் உள்ள 3,25,000 பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்கு திட்டத்தையும் அறிவித்துள்ளது மத்திய அரசு. அதன்படி 60 வயது கடக்கும் விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். இதற்கான ப்ரீமியம் தொகையை விவசாயிகள் ஒரு பாதியும் அரசு ஒரு பாதியும் செலுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. 18-40 வயது கொண்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரலாம்.