India

சாதியைக் குறிப்பிட்டு ‘ராகிங்’ : மருத்துவ மாணவி தற்கொலை!

மும்பையில் சாதிக் கொடுமையால் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மகளிர் நல மருத்துவம் படித்து வந்தார் பாயல் தட்வி. இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்து மருத்துவம் பயின்று வந்த இவரை சீனியர் மாணவிகள் சாதியைக் குறிப்பிட்டு ‘ராகிங்’ செய்துவந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாயல் தட்வி சீனியர் மாணவிகளால் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அவரை சீனியர் மாணவிகள் வாட்ஸ்-அப் குழுவிலும், நேரடியாகவும், மருத்துவப் பயிற்சியின்போது அனுமதி மறுத்தும் தொல்லை கொடுத்துள்ளனர். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சீனியர்களின் சாதி அடிப்படையிலான ராகிங்கை தாங்கிக் கொள்ள முடியாமல் பாயல் தட்வி கடந்த 22-ம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவ மாணவியின் தற்கொலை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக பலரும் போராடி வரும் நிலையில், அந்தக் கொடுமைக்கு மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவியே பலியாகியிருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.