India

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது! : அதிரடி உத்தரவு

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமலாக்க இயக்குனரகத்தின் தலைமை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா மே 22-ம் தேதி அதிகாரிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தலைமையகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஊடகங்களுடனான தொடர்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான சில விவரங்கள், தகவல்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த செய்திகளினால் தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நலன்கள் பாதிக்கக் கூடும்.

ஊடகங்களுக்கு பேட்டியளிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அமலாக்கத் துறை அதிகாரிகள் யாரேனும் மீறும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகங்கள் நடத்தும் விசாரணைகளை மேற்பார்வையிடுவதுடன், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கிய விசாரணைகளை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி அமலாக்கத் துறை தலைமையகத்தால் நடத்தப்படும் விசாரணை குறித்த தகவல்கள், சில அதிகாரிகளால் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்தே, அமலாக்கத் துறை இயக்குநர் ராஜீவ் குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.