India

கடும் வறட்சியால் விவசாயம் பாதிப்பு - கூலி வேலைகளுக்குச் செல்லும் கல்லூரி மாணவர்கள்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த ஓராண்டாக விவசாயம் நடைபெறாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

புனே பகுதி விவசாயிகள் சிலர் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்பது இன்றியமையாத தேவை. ஆனால், கடும் வறட்சியால் பலர் படிப்பை விட்டுவிட்டு குடும்பத்திற்காக கூலி வேலைகளுக்குச் சென்று வருகின்றனர்.

தற்போது பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் பலரும், கடைகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். படிப்புச் செலவுக்காகவும், குடும்பத்திற்கு உதவியாக இருக்கும்பொருட்டும் கடைகளில் கூலி வேலை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வறுமையால் கோடை விடுமுறையில் கூலி வேலை செய்துவரும் மாணவர்களுக்கு, புனேவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறது. மஹாராஷ்டிரா அரசு 151 தாலுகாக்களை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.