DMK Government

“பா.ஜ.க கணக்கை இந்த தேர்தலில் முடித்துவிடுவோம் என்றோம்; அதைச் செய்துவிட்டோம்” : பினராயி விஜயன் அதிரடி!

கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது.

140 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சியமைக்க, 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே இடது முன்னணி தான் முன்னிலை வகித்துவந்தது.

கேரளாவில் இடது முன்னணி 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதனால் கேரளாவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சி உறுதியாகிவிட்டது. இதன் மூலம் கேரளாவில் தொடர்ந்து ஆட்சியில் ஏறும் முதல் கட்சி என்ற பெருமை சிபிஎம் தலைமையிலான இடது முன்னணிக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், மக்கள் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி இருக்கும்போது தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதற்கு இது உகந்த நேரம் இல்லை. இது மக்களின் வெற்றிதான் என்று தெரிவித்தார்.

பல்வேறு பிரச்சினைகளை, சிக்கல்களை இடதுசாரி அரசு எவ்வாறு கையாண்டது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற தொடர்ந்து இடதுசாரிகள் அரசு ஆட்சியில் இருக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளார்கள்.

கேரள மக்கள் மதச்சார்பின்மையை பாதுகாக்க வாக்களித்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் வகுப்புவாத சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ளவில்லை. மதரீதியான தீவிரப் பற்றாளர்கள், மாநிலத்தை இரண்டாக துண்டாட முயன்றார்கள். ஆனால் அதை அரசு அனுமதிக்கவில்லை, மக்களும் அதை ஏற்கவில்லை.

ஏற்கெனவே கூறியதுபோல், பா.ஜ.க கணக்கை இந்த தேர்தலில் முடித்துவிடுவோம் என்றோம் அதை செய்துவிட்டோம். மற்ற மாநிலங்களில் பாஜக செய்யும் செயல்களைப் போல் செய்வதற்கு கேரளா ஏற்ற மாநிலம் அல்ல. தேர்தல் முடிவு அதை நிரூபித்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கேரளாவில் 93 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை - மீண்டும் முதல்வர் ஆகிறார் பினராய் விஜயன்!