DMK Government

அரசு செலவில் விளம்பரம் செய்யும் அதிமுக: திமுக மனு மீது நடவடிக்கை எடுத்திடுக -தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தமிழக அரசின் சார்பில், அ.தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.

இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரி தி.மு.க சார்பிலும், அத்தொகையை அ.தி.மு.க கட்சியிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விளம்பரங்கள் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின் அடிப்படையில் ஆளுங்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசு செலவில் விளம்பரம் வெளியிடும் ஆளும் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தி.மு.க அளித்த மனுவைப் பரிசீலித்து ஒரு வாரத்திற்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தினர்.

Also Read: மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிடுவதை நிறுத்துக: அதிமுக அரசுக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்!