DMK

இந்தியை எதிர்த்து 577 மைல்கள் பயணம்: திராவிட இயக்க தீரர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு தினம்!

திருவாரூர் மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். தீவிர சமூக செயல்பாட்டாளரான இவர், சென்னையில் அப்போதிருந்த தேவதாசி ஒழிப்பு முறைக்காக கடுமையாக போராடியவர்.

அதன்பின்னர் இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவாளராக இருந்த இவர், 1952-ல் பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.

திராவிட இயக்க வரலாற்றில் 1938-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு மைல் கல்லாகும். இந்தப் போராட்டத்தில் திருச்சி, உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 577 மைல்கள் நடந்தே வந்தவர் இவர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக்கொண்டதற்காக, 1938-ல் ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார். மேலும், சென்னையில் பள்ளி முன் இந்தி திணிப்பை எதிர்த்து, மறியல் செய்து கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வேலூர் சிறையில் இருந்தார்.

இவரின் 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு அவர் வாழும்போதே பெற்ற ஒரே அங்கீகாரம் தி.மு.க. சார்பில் அண்ணா வழங்கிய விருதுதான். சுயமரியாதை இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் விருது வழங்கி சிறப்பிக்க அண்ணா முடிவு செய்தார். இதற்கு இவருடைய பெயரைத்தான் அண்ணா முதன்முதலில் தேர்வு செய்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றபோது, முதல்முறையாக ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கு "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்” என்று இவரது பெயரை வைத்து, தொடர்ந்து செயல்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, 2022 ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை பெண் கல்வியை ஊக்குவிக்கும்படியாக ”மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” என்று மாற்றியமைத்தது. இப்புதிய திட்டத்தின்படி 6 முதல் 12ஆம் வகுப்புவரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.

இத்திட்டத்தில் மாணவிகளின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். மேலும் இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “இதை செய்தால்தான் ரூ.90 கோடி சொத்து கிடைக்கும்” - அருணாச்சலம் பட பாணியில் மகளுக்கு கண்டிஷன் போட்ட தந்தை!