DMK

நீதிமன்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பேனர் வைப்பதா? - அ.தி.மு.க அரசுக்கு புதுக்கோட்டை தி.மு.க கண்டனம்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டபட்டிருக்கும் விளம்பர பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலுக்கு புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.கவினரால் கட்சி விளம்பர பதாகைகள், பேனர்கள் வைத்து பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு அளித்து வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருவதையொட்டி சாலைகளின் இருமருங்கிலும் எதிரே வரும் வாகனம் தெரியாத வண்ணம் விளம்பர பேனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2017ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு கீழே விழுந்து ரகு என்பவர் உயிரிழந்த நிலையிலும், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அ.தி.மு.கவினரின் விளம்பர பேனரால் சென்னையைச் சேர்ந்த 23 வயது மாணவி சுபஸ்ரீ உயிரிழந்த நிலையிலும், WhoKilledRagu, WhoKilledsubasri என்ற கேள்வி சமூகப்பார்வைக்கு தி.மு.க எடுத்துச் சென்றது.

நீதிமன்றத்திற்கு இதுதொடர்பான வழக்குகள் சென்றபோது, அலங்கார வளைவால்தான் விபத்து ஏற்பட்டது என உறுதி செய்த நீதிமன்றம், இதுபோன்று நடுரோட்டில் பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. ஆனால் அ.தி.மு.க அரசு அதை துளியும் பொருட்படுத்தாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது.

எவ்வித அனுமதியும் இல்லாமல் சாலைகளை மறைத்து பேனர்களை சாலையின் இரு மருங்கிலும் கட்டப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் இருக்கும் இந்த செயலுக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.