DMK

“சமூகநீதி என்ற இலட்சிய சங்கநாதத்தை தி.மு.க எப்போதும் ஒலிக்கும்!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து, மத்திய அரசு சார்பில் இந்த வழக்கில் ஒரு பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி, மொத்த இட ஒதுக்கீடான 50%க்கு உட்பட்ட OBC இடஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. சமூக நீதிக்கான பயணத்தில், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “என்ன விலை கொடுத்தேனும் சமூகநீதியைப் பாதுகாக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட நெடிய போராட்டத்தில், இன்னொரு சாதனை மிளிரும் வெற்றியாக, மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் மருத்துவ இடங்களில் (முதுநிலை மருத்துவம் மற்றும் எம்பி.பிஎஸ்), 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உட்பட்டு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய 27 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை அளித்தும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும், உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுத்தும், இந்த முதற்கட்ட வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.

இப்போது 27% இடஒதுக்கீட்டினை அளிக்க மத்திய அரசு முன்வந்திருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், 50 சதவிகித இடஒதுக்கீடு பெறுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும்.

சமூகநீதி என்ற இலட்சிய சங்கநாதத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம், எந்தச் சந்தர்ப்பத்திலும் அயர்ந்து விடாமல், அகில இந்திய அளவில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மருத்துவ இடங்களில் OBC இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்” - தி.மு.க தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு!