DMK
''மத்திய அரசுக்கு கூஜா தூக்கும் அ.தி.மு.க அரசு'' - தயாநிதி மாறன் காட்டம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க இளைஞரணியினர் மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
சட்ட நகலைக் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினரை போலிஸார் கைது செய்து சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி, ’’தி.மு.க இளைஞரணி சார்பாக அதன் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரான அ.தி.மு.க அரசு, அவர்களை கைது செய்து அடைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, வெட்கமே இல்லாமல் மத்திய அரசுக்கு கூஜா தூக்கும், அ.தி.மு.க அரசு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
அவர்கள் மட்டும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால், ராஜ்யசபாவில் இந்த தீர்மானம் தோற்றிருக்கும். சிறுபான்மையினரின் உரிமை காப்பாற்றப்பட்டிருக்கும்.
ஆனால் இவர்கள் பா.ஜ.க.வின் காலடியில் விழுந்து கிடப்பதால், அந்த மசோதா வெற்றி அடைந்ததால் சிறுபான்மையினருக்கு எதிராக மாறியிருக்கிறது. தங்களுடைய எஜமானர்களுக்கு சேவை செய்கின்ற நாயை விட கேவலமான அ.தி.மு.க அரசு செயல்பட்டிருக்கிறது.
இந்தியாவில் நிலவிவரும் மோசமான பொருளாதார நிலையை மறைப்பதற்காக இதுபோன்ற சட்டங்களை கொண்டு வருகின்றனர். இந்த சட்டத்தை கொண்டு வருவதால் என்ன பயன்? இந்தியா முன்னேறி விடப் போகிறதா?
மக்களிடையே பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட வைக்க முயற்சிக்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்ததன் மூலம் இந்தியாவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!