DMK

தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்காத எடப்பாடி அரசு : களத்தில் இறங்கிய தி.மு.க தலைவர்!

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு, லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக மெனக்கெட்டு வருகின்றனர்.

ஒரு குடம் தண்ணீருக்கு 10 முதல் 20 ரூபாய் வரை செலவிட வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதிலும் சில பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு 3 முதல் 4 குடங்களில் மட்டுமே தண்ணீர் தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்தும் அதற்கான எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடப்பாடி அரசு எடுக்கவில்லை.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத வேளையில், தி.மு.க களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு குடிநீரை விநியோகித்து வருகின்றனர்.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தி.மு.க சார்பில் 30 ஆயிரம் லிட்டர் குடிநீரை டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அத்தொகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீரை தானே வழங்கினார்.