Cinema

அஜித் குறித்து பதிவு... ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் செயலால் ரசிகர்கள் ஷாக் - நடந்தது என்ன?

தமிழில் கடந்த 2013-ல் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 'நேரம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானாவார்தான் அல்போன்ஸ் புத்ரன். அதன்பிறகு இவரது இயக்கத்தில் மலையாளத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிரமேம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

மாஸ் ஹிட் கொடுத்த பிரமேம் படத்தின் மூலம் இந்திய திரையுலகிற்கு அறிமுகமானார். அதிலும் தமிழ்நாட்டில் இந்த படம் கல்லூரி மாணவர்களின் பெரும் அபிமானத்தை பெற்று மாபெரும் ஹிட் ஆனது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் ஒன்றில் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. பிரேமம் படத்திற்கு பிறகு இவர் படம் எதுவும் இயக்கத்தால் ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையடுத்து சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் வெளியான 'கோல்டு' படத்தை இயக்கினார். பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதன்பிறகு தற்போது சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'GIFT' என்ற படத்தை இயக்கி வருகிறார். திரைத்துறை ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைதளத்தில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருகிறார் அல்போன்ஸ் புத்ரன். இந்த சூழலில் தற்போது நடிகர் அஜித் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில் அவர், 'இந்த பதிவு அஜித் சாருக்காக.. நிவின் பாலியும் சுரேஷ் சந்திராவும் நீங்கள் அரசியலுக்கு வர உள்ளதாக கூறியதை கேட்டேன். இது 'பிரேமம்' படத்தில் நிவின் நடிப்பை கண்டு ரசித்த உங்கள் மகள் அனோஷ்காவுக்காக நிவினை வீட்டிற்கு அழைத்து பேசினீர்களே அப்போது நடந்தது. ஆனால், உங்களை இதுவரை எந்த பொதுவெளியில் அரசியல் நிகழ்வுகளில் எதிலும் பார்க்கவில்லை.

அப்படி என்றால், அவர்கள் என்னிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள், இல்லை நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? இல்லை எனில் வேறு யாரோ உங்களுக்கு எதிராக இருக்கிறார்களா?. இந்த மூன்றும் இல்லை என்றால் எனக்கு கடிதம் வாயிலாக நீங்கள் பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், நானும், பொதுமக்களும் உங்களை நம்புகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவரது பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதிரியான சூழலில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட வாய்ப்புகள் இல்லாமல் இவருக்கு மனது பாதிக்கப்பட்டதாக பலரும் இவரது பதிவுக்கு கீழ் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் திரையுலகில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் "வயசாகுறதுக்குள்ள அஜித் சாரை மீட் பண்ணனும்" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “விஜயகாந்தை சினிமா உலகம் ஏன் இப்படி கொண்டாடுகிறது..?” - இணையத்தில் வைரலான பதிவு !