Cinema

தாலிபான்களிடம் இருந்து தப்பித்த பிரபல பாடகி.. போதுவெளியில் நடந்த சோகம்.. அதிர்ச்சியில் மக்கள் !

ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சி தொடங்கியதில் இருந்தே பெண்களுக்கான சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவர்களிடம் இருந்து சிலர் தப்பிக்க வேண்டும் என்பதால் அங்கிருந்து தப்பித்து வெளியேறி வருகின்றனர். இதில் இருந்து தப்பித்த பெண்களில் ஒருவர் தான் பிரபல பாடகி ஹசிபா நூரி (Hasiba Noori).

ஆப்கானில் பிரபல பாடகியாக இருந்த அவர், அங்கிருந்து தப்பித்து தனது தாயுடன் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார். இஸ்லாமாபாத்தில் தங்கி தற்போது பாகிஸ்தானிலும் பிரபல பாடகியாக இருந்து வருகிறார். இவருக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவ்வப்போது இவர் வெளியே தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் உண்டு.

இந்த நிலையில், நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கே நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பாடகி ஹசிபா நூரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

துப்பாக்கி குண்டு ஹசிபா மீது பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பிரபல பாடகி பொதுவெளியில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து அவரது மறைவுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் தான் ஆப்கானில் பட்ட துயர சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார். ஆப்கானில் அவரது குடும்பத்தை விட்டு இவர் தனது தாயுடன் இஸ்லாமாபாத்தில் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : திரைப்படம் மற்றும் குறும்படத்துக்கான அறிவிப்புகள் என்ன ?