Cinema

நாட்டு நாட்டு : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு Dance சொல்லிக்கொடுத்த ராம்சரண்.. வீடியோ வைரல் !

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி, பாகுபலி 1, 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்கிய படம் தான் RRR. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் என்.டி.ஆர், ராம்சரண், அலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவான இப்படம், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மாஸ் ஹிட் கொடுத்தது.

கடந்த ஆண்டு வெளியான சிறந்த இந்திய படங்களில் இந்த படமும் சிறந்த படமாக விளங்கியுள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு, தொல்குடிகளின் போராளி கொமரம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் பல நாடுகளிலும் மொழிபெயர்த்துத் திரையிடப்பட்டது.

சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 1,200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. விஜயேந்திர பிரசாத்தின் கதையான இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பல்வேறு விருதுகளை அள்ளிக்குவிக்கும் இப்படம் கடந்த ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றது. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி, இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு விருதுகளை குவித்து வரும் இந்த படம், திரையுலகின் உயரிய விருதுகளாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘ஆஸ்கர்’ விருதுகளுக்கு பல்வேறு பிரிவுகளில் RRR திரைப்படம் போட்டியிட்டது. ஹாலிவுட் சீசனின் தொடக்க விழா எனக் கருதப்படும் அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதுக்கு சிறந்த பிறமொழிப் படம் மற்றும் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் RRR பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 80-ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் RRR படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றது. கீரவாணி இசையில் உருவான இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியுள்ளார். தொடர்ந்து இந்த பாடல் ஆஸ்கர் விருது பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

உலகமே கொண்டாடும் இந்த பாடலுக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இதன் எதிரொலியாக கீரவாணிக்கும் இந்தாண்டின் பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அனைவருக்கும் பிடித்தமான இந்த பாடலின் நடனம், ஒரு மாஸ் ஸ்டெப்பாக இருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற இ-பிரிக்ஸ் ரேஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராம்சரண் பங்கேற்றார். அதோடு இந்த நிகழ்சியில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது ஆனந்த் மஹிந்திரா, ராம் சரனுடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கான சைன் ஸ்டெப்பை போட்டு மகிழ்ந்தார்.

இதனை அவர் சரிவர செய்யவில்லை என்பதால் அவருக்கு ராம் சரண் அந்த பாடலுக்கான ஸ்டெப்பை கற்று கொடுத்தார். இது தொடர்பான வீடியோ ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ரேஸ் தவிர, ஹைதராபாத் இ-பிரிக்சிஸ் நிகழ்வில் ஒரு உண்மையான போனஸ் எனக்கு என்ன வென்றால் ராம்சரணிடம் நாட்டு நாட்டு பாடலுக்கான அடிப்படையான ஸ்டெப்ஸ்களை கற்றுக் கொண்டதுதான். ஆஸ்கார் விருதாளர்களுக்கு நன்றியும், நல்வாழ்த்துக்களும், நண்பரே!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறு ரசிகரை நடிகர் ராம் சரண் நேரில் சென்று பேசி ஆறுதல் தெரிவித்ததோடு, அவருக்கு பரிசு ஒன்றையும் வழங்கி மகிழ்ச்சி படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.