Cinema

'சபாபதி' போஸ்டர் சர்ச்சை : நடிகர் சந்தானம் மீது நடவடிக்கைக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'சபாபதி' படம் நவம்பர் 19ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்த படத்தில் குக்வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அண்மையில் சபாபதி படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. 'இதில் தண்ணீர் திறந்துவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திரண்டு வாரீர்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ள சுவற்றின் முன்பு நடிகர் சந்தானம் சிறுநீர் கழிப்பது போல் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது என கூறி பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடிகர் சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில், "சபாபதி படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் நடிகர் சந்தானம் ஒரு சுவரின் முன் சிறுநீர் கிழிப்பது போல் உள்ளது. அந்த சுற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திரண்டு வாரீர் என எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், அண்டை மாநிலங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி பல போராட்டங்கள் நடந்துள்ளது. ஏன் திரைத்துறையினரே தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தற்போது சபாபதி படத்தின் இந்த போஸ்டர் தண்ணீர் கேட்டு போராடுபவர்களைக் கிண்டல் செய்வதுபோல் உள்ளது.

மேலும் பொது வெளியில் சிறுநீர் கழிப்பது போலவும் உள்ளது. எனவே நடிகர் சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சபாபதி படத்தின் போஸ்டரை நீக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"யாரையும் உயர்த்திக் காட்ட யாரையும் தாழ்த்தி காட்டக்கூடாது" என ஜெய்பீம் படம் குறித்து தனது கருத்தை நடிகர் சந்தானம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சபாபதி படத்தின் போஸ்டரை பலர் குறிப்பிட்டு "உங்களுக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டமா?" என சந்தானத்தை இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நாங்க சூர்யா பக்கம்... அநீதியை கேள்வி கேட்குறதெல்லாம் சமூக நீதிக்கான ஆயுதம்தான்” : வெற்றிமாறன் ட்வீட்!