Cinema

புனீத் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.. குடும்ப நட்பை நினைவுகூர்ந்து உருக்கம்!

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகரும், தி.மு.க எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனீத் ராஜ்குமார் கடந்த மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடன் பெங்களூர் சென்ற உதயநிதி ஸ்டாலின் சதாசிவ நகரில் உள்ள புனீத் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சென்று புனீத் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கண்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், புனீத் ராஜ்குமார் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனீத் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் எனது தாத்தா கலைஞர் மற்றும் தந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மிக நெருக்கமாகப் பழகியவர்.

ராஜ்குமார் குடும்பத்தினர் எங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக நட்பு பாராட்டக் கூடியவர்கள். எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் புனீத் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Also Read: கலைஞரிடத்தில் அன்பு கொண்ட புனீத் ராஜ்குமார்... 20 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரை சந்தித்தது ஏன் தெரியுமா?