Cinema

’அண்ணாத்த’ திரையிடப்பட்ட தியேட்டரில் பரபரப்பு; ஃபால் சீலிங் விழுந்ததால் அலறியடித்து ஓடிய ரசிகர்கள்!

தீப ஒளியை முன்னிட்டு திரை விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ’அண்ணாத்த’ படம் இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் 14 திரையரங்குகளில் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை முதல் நாளிலேயே பார்க்க ஆர்வம் கொண்ட ரசிகர்கள் திரையரங்குகளில் அதிகாலை முதல் குவிந்தனர்.

முதல் காட்சி காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் வரும் ரசிகர்கள் திரையரங்கு வெளியே பட்டாசு வெடித்து மேளம் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அவ்வகையில் அண்ணாத்த படம் திரையிடப்பட்ட அண்ணா சாலையில் உள்ள ராஜா திரையரங்கில் காலை 11.15 திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தியேட்டரின் ஒரு மூளையில் ஃபால் சீலிங் விழுந்ததால் ரசிகர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

ஆனால் நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. படம் முடியும் தருவாயில் இருந்ததால் உடைந்த இடத்தை தாண்டி நின்று கொண்டு ரசிகர்கள் படம் பார்த்து சென்றனர்.

சில நிமிடங்களில் படம் முடிந்ததும் ரசிகர்கள் அனைவரும் வெளியே வந்து விட்டனர். இதனையடுத்து சுத்தம் செய்து விட்டு கட்டிடத்தின் தன்மையை உறுதி செய்த பின் அடுத்த காட்சி திரையிடப்பட்டது.

Also Read: சின்ன இடப்பிரச்னை; கொலையில் முடிந்த தீப ஒளி கொண்டாட்ட வாக்குவாதம் : கர்நாடகாவில் நடந்த விபரீதம்!