Cinema

நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் கஞ்சா எண்ணெய் பறிமுதல் - NCB அதிகாரிகள் சோதனையில் அம்பலம்!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கிரிஷ்மா பிரகாஷ் இல்லத்தில் என்.சி.பி அதிகாரிகள் நடத்திய சோதனையில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் தொடர்ந்து போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையையடுத்து பாலிவுட்டில் அடுத்தடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல பரபரப்பான தகவல் வெளியாகி வருகிறது. முன்னதாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தி ஆகியோர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளின் பெயர்களும் இதில் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு முகமை சம்மன் அனுப்பியது. அதற்கு அவர்கள் அனைவரும் நேரில் ஆஜராகினர்.

இதற்கிடையே போதைப்பொருள் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத், தீபிகா படுகோனே மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தீபிகாவின் மேலாளர் இல்லத்தில் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சர்ச்சைகளுக்கும், பரபரப்புகளும் மேலும் வலு சேர்த்துள்ளது.