Cinema

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூபாய் 1.25 கோடி நிதி அளித்த நடிகர் அஜித்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. தடுப்பு மருந்துகளும், குணப்படுத்துவதற்கான மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் நிமோனியா, மலேரியா ஆகிய கடுமையான காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 4,700-ஐ தாண்டியுள்ள கொரொனா பாதிப்பு எண்ணிக்கையில் 386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் 137 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கக் கோரி மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன்படி, பிரதமர் மற்றும் தத்தம் மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு சினிமா மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ 1 கோடியே 25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் கொடுத்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தமிழ் சினிமா உள்ளிட்ட இந்திய சினிமா துறையே முடக்கப்பட்டுள்ளது. அதன்படி, படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் முடங்கிப்போயுள்ள தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்சிக்கு ரூ.25 லட்சமும் நடிகர் அஜித் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

இந்தச் செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #PerfectCitizenThalaAjith என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: “கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்ததும் இதைச் செய்யுங்கள்” - இந்திய வியாபாரிகளுக்கு ஆதரவாக நடிகை காஜல் ட்வீட்!