Cinema

விஜய்யின் ‘மாஸ்டர்’ இணை தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை தீடீர் சோதனை - பரபரப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் 300 கோடியை தாண்டி வசூல் செய்ததாகவும் அதற்கு உரிய வருமான வரி செலுத்தவில்லை எனவும் கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் நடிகர் விஜய் வீடு உட்பட பல பகுதிகளில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அந்தச் சோதனையில், விஜய் வீட்டில் இருந்து பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை விளக்கமளித்தது. மாறாக, ஏ.ஜி.எஸ் மற்றும் அன்புச்செழியனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

லலித் குமார்

இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் என்பவரின் வீடு மற்றும் இல்லங்களில் வருமானவரித் துறையினர் நேற்று மாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்தச் சோதனையானது வரி ஏய்ப்பு செய்வதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும், சோதனையின் முடிவிலேயே வருமான வரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் நோக்கம் குறித்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ரகசியமாக நடக்கிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’ ஆடியோ வெளியீடு? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வருகின்ற 15ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்வது சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.