Cinema

சூர்யா-ஹரி கூட்டணியின் ‘அருவா’ படத்துக்கு சிக்கல்!

சூரரைப் போற்று படம் ரிலீசான கையோடு, தனது 39வது படத்துக்கான வேலைகளில் இறங்கவுள்ளார் நடிகர் சூர்யா. ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 39 படத்துக்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். சூர்யா-ஹரி கூட்டணியில் இவர் முதல் முறையாக இணைந்துள்ளார்.

ஸ்டுடியோ க்ரீனின் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்துக்கு ‘அருவா’ என தலைப்பிடப்பட்டதாக நேற்று முன்தினம் ட்விட்டரில் அறிவித்திருந்தார். ஏப்ரல் மாதம் படத்தின் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்ததோடு இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சூர்யாவும் - ஹரியும் இணைந்து ஏற்கெனவே ‘ஆறு’, ‘வேல்’ மற்றும் ‘சிங்கம்’ படத்தின் 3 பாகங்கள் என 5 படங்களில் வெற்றியடைந்த நிலையில் அருவா படமும் ரசிகர்களிடையே வரவேற்பை அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சூர்யா 39 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட அடுத்த படத் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாடலாசிரியரான ஏகாதசி என்பவர் ‘அருவா’ என்ற பெயரில் ஏற்கெனவே இயக்கியுள்ளார். அந்த படத்தை இயக்குநரும் நடிகருமான தருண்கோபி தயாரித்துள்ளார்.

பூ கட்டும் தொழிலாளியாக உள்ள நாயகன், எப்படி அரிவாள் சண்டையிடுபவனாக மாறினான் என்பதே ஏகாதசியின் ‘அருவா’ படக்கதை. ஏகாதசியின் படம் இன்னும் ரிலீசாகவில்லை என்றாலும், பெர்லின் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றுள்ளது.

இயக்குநர், பாடலாசிரியர் ஏகாதசி

இந்த படம் விரைவில் வெளியாவதற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகவுள்ள படத்துக்கும் அருவா என பெயரிட்டுள்ளதை ஏற்க முடியாது என்றும் ஏகாதசி தெரிவித்திருக்கிறார். இதனால் சூர்யா 39 படத்துக்கு தொடக்கமே சிக்கலாகியுள்ளது.

அண்மைக்காலமாக வெளிவந்த சூர்யா படங்கள் ஏதும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இந்த தோல்விக்கெல்லாம் சூரரைப் போற்று விடைக் கொடுக்கும் நம்பி இருந்த நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது. தற்போது அவரது அடுத்தப்படம் அறிவிக்கப்பட்ட உடனேயே சிக்கல் ஆரம்பித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.