Cinema

“நிச்சயம் செய்துவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார்” - ‘பிக்பாஸ்’ தர்ஷன் மீது நடிகை போலிஸில் புகார்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி செய்ததாக நடிகை சனம் ஷெட்டி போலிஸில் புகார் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சனம் ஷெட்டி கூறியதாவது, “கடந்த 2019 மே மாதம் தர்ஷனுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூன் மாதம் திருமணம் நடக்க இருந்தது. அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற தர்ஷனுக்கு வாய்ப்பு வந்தது. பிக்பாஸில் பங்குபெற்ற பின்னர் திருமணம் செய்து கொள்வதாக தர்ஷன் உறுதி அளித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் என்னை திருமணம் செய்துகொள்வார் என நினைத்தேன். ஆனால் என்னோடு பேசுவதற்கு அவர் தயாராக இல்லை எனத் தெரியவந்தது. இதுகுறித்து நான் கேட்டபோது என்னைப் பற்றியே தவறாகக் கூறினார்.

சினிமா நடிகர்களையும் என்னையும் இணைத்து தவறாகச் சித்தரித்துக் கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார். இதனால் எனது குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. எனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

திருமணத்தை நிறுத்தியது ஏன் எனக் கேட்டதற்கு என்னுடைய வழியில் குறுக்கே வரக்கூடாது எனவும், மீறி வந்தால் எனது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உன்னைப்பற்றி தவறாக சித்தரிப்பார்கள் எனவும் மிரட்டினார்.

தர்ஷனை பிக்பாஸுக்கு சென்றது முதல் அவர் புகழ்பெற்றது வரை எனக்குப் பங்கு உண்டு. அவர் தேவைக்காக 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறேன். என்னை பொதுவெளியில் தவறாகச் சித்தரித்து கூறிவரும் தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: மோசடி வழக்கில் பிக்பாஸ் கவினின் குடும்பத்தினருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை: தொடரும் பிக்பாஸ் சர்ச்சைகள்!