Cinema

விஜய்யின் ‘பிகில்’ படத்தை அமேஸான் ப்ரைமில் வெளியிட தடை!

விஜய் - அட்லி கூட்டணியில் ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களுக்குப் பிறகு உருவான படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த அக்டோபரில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

நயன்தாரா, விவேக், கதிர், ஆனந்த் ராஜ், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் என பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை ‘பிகில்’ படம் பெற்றிருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, படம் ரிலீஸாவதற்கு முன்பே கதை திருட்டு விவகாரத்தில் பிகில் பட கதை தன்னுடையது என உதவி இயக்குநர் செல்வா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதேபோல், தெலுங்கு இயக்குநரான நந்தி சின்னிகுமார் என்பவரும் பிகில் பட கதை திருட்டு தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தார்.

அதில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரரும், இப்போதைய பயிற்சியாளருமான அகிலேஷ் பாலின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முடிவெடுத்து கதையையும் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐதராபாத் சிவில் நீதிமன்றத்திலும் நந்தி சின்னிகுமார் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு பிகில் படங்களையும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், ‘பிகில்’ மற்றும் தெலுங்கு பதிப்பான ‘விசில்’ ஆகிய இரண்டு படங்களையும் டிஜிட்டலில் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.