Cinema

“நடிகை மஞ்சு வாரியருக்கு தொடர்ச்சியாக தொல்லை” : பிரபல திரைப்பட இயக்குநர் திடீர் கைது! 

மலையாளத்தின் சிறந்த நடிகை என்று பெயரெடுத்த மஞ்சுவாரியர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.

இந்நிலையில் மஞ்சு வாரியர், கடந்த அக்டோபர் 21 ம் தேதி பிரபல திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக மஞ்சு வாரியர் குற்றம் சாட்டினார். போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில், ஸ்ரீகுமார் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுவதாகக் கூறியிருந்தார்.

மோகன்லால் நடித்த 'ஒடியன்' படம் தயாரிப்பில் இருந்த காலத்திலிருந்தே, திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீ குமார் மேனனுக்கும், தனக்கும் இடையே தனிப்பட்ட பகை இருந்து வந்ததாகவும் மஞ்சு வாரியர் தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்து தன்னை சமூக ஊடகங்களில் மிரட்டுவதாகவும் அவதூறு செய்வதாகவும் புகார் கூறியிருந்தார்.

Also Read: ‘என்னை ஏமாற்றிவிட்டார்’- சினிமா இயக்குநர் மீது ‘அசுரன்’ பட நடிகை போலிஸ் டி.ஜி.பி.,யிடம் பரபரப்பு புகார்!

மஞ்சு வாரியர் தனது புகாரில், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியரும் பின்னர் டிஜிட்டல் போர்ட்டல் நாரதனேவ்ஸின் ஆசிரியருமான மேத்யூ சாமுவேலின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இவரைப் பயன்படுத்தி ஸ்ரீகுமார் மேனன் தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பினார் என்றும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கேரள போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் மீது சமூக ஊடகங்களில் அவதூறு செய்ததற்காக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு ஸ்ரீகுமார் மேனனை கேரள போலீசார் கைது செய்தனர்.

நடிகையின் புகாரைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநரை போலிஸார் கைது செய்திருப்பது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.