Cinema

“அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவர் கொத்தியது போல இருக்கிறது பிகில்” - இப்படிச் சொன்னது யார்?

நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் இன்று வெளியானது.

‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 180 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது.

'பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் குறும்பட இயக்குநர் செல்வா அந்த வழக்கை வாபஸ் வாங்கினார்.

இதையடுத்து, ‘பிகில்’ படத்தை வெளியிட தடை கோரி கே.பி.செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், உயர்நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, இன்று திட்டமிட்டபடி வெளியானது ‘பிகில்’. முதல் நாள் படம் பார்த்த விஜய் ரசிகர்கள் ‘பிகில்’ படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். எதிர்மறை விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், ‘பிகில்’ படம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் கதைக்கு உரிமை கொண்டாடிய கே.பி.செல்வா. இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், “யுவர் ஹானர், அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவர் கொத்தியது போல் இருக்கிறது என் கட்சிக்காரரின் கபாலம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.