Cinema

“பிகில் படத்துக்கு சிறப்புக்காட்சி திரையிடக்கூடாது” - தடை கோரி சென்னை மாநகர கமிஷனரிடம் புகார்!

நடிகர் விஜய்யின் 63வது படமாக உருவாகியுள்ள ‘பிகில்’ தீபாவளியை முன்னிட்டு வருகிற 25ம் தேதி வெளியாக இருக்கிறது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படும். அதற்கென கூடுதல் கட்டணங்களும் தியேட்டர்களில் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இது அரசு விதிமுறைகளுக்கு எதிரான செயல் எனக் கூறி சிறப்புக் காட்சி திரையிடலுக்கு தடை கோரப்பட்டு வருகிறது.

அந்தவகையில், விஜய்யின் பிகில் படத்துக்கும் சிறப்புக் காட்சி திரையிடலை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை வேப்பேரியில் மாநகர கமிஷ்னர் அலுவலகத்தில் சமூல ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறப்பு காட்சி என்ற பெயரில் அதிகாலை 4 மணிக்கு பிகில் படத்தை திரையிடவுள்ளனர். இது அரசு விதிமுறைகளுக்கு எதிரானது. அரசாணையை மீறி பல தியேட்டர்கள் செயல்படுகிறது என்றார்.

மேலும், பிகில் பட சிறப்பு காட்சிக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக டிக்கெட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த சிறப்பு காட்சி திரையிடலை தடை செய்தும், கூடுதல் கட்டண வசூலை காவல்துறை தடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

அதுபோல, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தையும் திருப்பித் தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.