Cinema

தென்னிந்திய சினிமாவுக்குள் காலடி வைக்கும் ஆலியா பட் : பிரமாண்ட இயக்குநரின் படத்தில் அறிமுகம்!

பாகுபலி படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். (ரத்தம், ரணம், ரெளத்திரம்) இதில், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை முன்வைத்து 1920ம் ஆண்டில் கதை பயணிக்கும்படி ராஜமவுலி இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

மகதீரா படத்துக்குப் பிறகு ராம்சரணும் ராஜமவுலியும் இணைந்துள்ளனர். அதேபோல், ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் முதன்முறையாக RRR படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

சுமார் ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக இருந்த ஆர்.ஆர்.ஆர். படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும்படி திட்டமிட்டு பணியாற்றி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்தத் தகவலை ஆலியா பட்டே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள ஆலியா, சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராஜமவுலி, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிக்க சிறிய வாய்ப்பு கிடைத்திருந்தாலும் என் கனவு நிறைவேறியதாக நினைக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஆலியா.

இதன் மூலம், தென்னிந்திய சினிமாவில் ஆலியா பட் நடிக்கவிருக்கும் முதல் படமாகியிருக்கிறது ‘ஆர்.ஆர்.ஆர்’. முன்னதாக ‘சாஹோ’ படத்தின் மூலம் ஷ்ரத்தா கபூர் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆர்.ஆர்.ஆர் படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, பிரியாமணி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.