Cinema

மீண்டும் காதலில் சிம்பு? : புகைப்படத்தால் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம்!

நடிகர் சிம்புவுக்கு இந்த வருட ஓப்பனிங் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’. இந்தப் படம் பெரிதாக செல்ஃப் எடுக்கவில்லை. இந்த வருடம் மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவுக்கு எந்த படமும் பெரும் வெற்றியைத் தரவில்லை.

தற்போது, கன்னட ரீமேக் படமான மஃப்டியில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார் சிம்பு. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த ‘மாநாடு’ படத்திலும் சிம்பு இல்லை. அதற்குப் பதிலாக ‘மகாமாநாடு’ என்கிற படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார். அதுவும் டேக் ஆஃப் ஆவதாகத் தெரியவில்லை.

இப்படித்தான், சில வருடங்களுக்கு முன்பு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு ‘வேட்டை’ என்கிற படத்தில் நடிப்பதாக இருந்தது. மாநாடுக்கு நடந்தது போல கசப்பான அனுபவத்தால் அந்தப் படமும் கைவிடப்பட்டது. அதற்குப் போட்டியாக, ‘வேட்டை மன்னன்’ என்கிற படத்தை துவங்கினார் சிம்பு. அதுவும் இப்போது வரை என்ன ஆனதென்றே தெரியவில்லை.

இப்படியான சிம்புவின் வாழ்க்கையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஓர் அழகான திருப்பத்தை நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

சமீபத்தில் குடும்பத்துடன் சிம்பு இருக்கும் புகைப்படம் வெளியானது. அந்தப் புகைப்படத்தில் அனைவரும் ஜோடியாக இருக்க, சிம்பு மட்டும் தனியாக இருந்தார். தாய், தந்தையுடன் தம்பி குரளரசன் அவரின் மனைவியுடனும், தங்கையும் அவரின் கணவருடனும் இருந்தார். ஆனால் சிம்பு மட்டும் சிங்கிளாக இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, சிம்புவின் முன்னாள் காதலி மனமுருகிப் பேசியிருக்கிறாராம். அந்தப் பேச்சு நீண்டு மீண்டும் காதலாக மலரவும் வாய்ப்பிருப்பதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது.

சிம்புவுக்கு நல்லது நடந்தால், ரொம்ப நல்லது என்பதே அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.