Cinema

ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த பெண்... இன்று பாலிவுட் பாடகி : ஒரு வீடியோ வாழ்க்கையையே மாற்றிய அதிசயம் !

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண்மணி பாடிய பாடல் வைரலானதால் பாலிவுட்டில் பாடகியாவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் பாடிய ‘ஏக் பியார் கா நக்மா ஹே’ என்ற இந்தி பாடலை பாடி அசத்திய மேற்கு வங்க பெண்மணியின் வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலானது.

மேலும், இந்த வீடியோ இணையத்தில் பரவி, கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்ததால், ஒரே நாளில் பிரபலமாகியுள்ளார் ராணு. லதா மங்கேஷ்கரை பிரதிபலிப்பது போல் அவரது குரலும் உள்ளது என குறிப்பிட்டு பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து மும்பையைச் சேர்ந்த பொழுதுபோக்கு சேனல் ஒன்று ராணு மோண்டாலை நாடி, அவர்கள் நடத்தவிருந்த ரியாலிட்டி ஷோவில் பாட வைத்துள்ளது. இதற்காக ராணு மோண்டாலை அழகுபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளது.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன், தான் இசையமைக்கவுள்ள பாலிவுட் படத்தில் பாடுவதற்காக ராணு மோன்டாலுக்கு வாய்ப்பளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களால், தீமை மட்டுமல்ல சில நேரங்களில் நல்லதும் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.