Cinema

தமிழ் திரைப்படங்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் 'மத்திய அரசியல்' - ஆதங்கத்தை வெளிப்படுத்திய வசந்த பாலன்!

அண்மையில் வெளியிடப்பட்ட 2018-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், தமிழ் சினிமா கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ’பாரம்’ என்ற திரைப்படத்துக்கு சிறந்த தமிழ் மொழிப்படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மக்களால் கொண்டாடப்பட்ட பல தரமான படங்கள், கடந்த ஆண்டு வெளியாகியிருந்த போதும், திட்டமிட்டு தமிழ் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுவதாக இயக்குநர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

தேசிய விருதுகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது இந்த ஆண்டு மட்டும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கான வேலைகளை நடந்து வருவதாக இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது ஃபேஸ்புக் பதிவில் “தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, வடசென்னை,ராட்சசன்,96, பரியேறும் பெருமாள், உள்ளிட்ட நிறைய நல்ல,திறமையான,தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா ? பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டியும், சாதனாவும் தங்கள் உயிரைக் கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தார். யுவனின் இசையில்,தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் என்ன குறை கண்டீர்கள் ?” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும், இதுகுறித்து சினிமா வட்டாரங்கள் மூலம் தனக்கு கிடைத்த தகவல் பற்றியும் பதிவிட்டுள்ளார். “தமிழில் இருந்து நல்ல நடுவர்கள் தேர்வு குழுவுக்கு அழைக்கப்படவில்லை. கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக செயல்பட ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள். முப்பது நாள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன ? இந்த நிலை மாறவேண்டும். தமிழ் திரையுலக உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.” என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.