Cinema

முற்போக்கான கதைக்களம்தான்; ஆனால்..? : அமலா பாலின் ‘ஆடை’ விமர்சனம் !

இயக்கம் : ரத்னகுமார்
நடிப்பு : அமலா பால், ரம்யா, ஸ்ரீரஞ்சனி, விவேக் பிரசன்னா, கோபி,
இசை: பிரதீப் குமார், ஊர்கா(பேண்ட்)
ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்
எடிட்டிங்: ஷபீக் முகமது அலி

ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் தனியாக நிர்வாணமாக சிக்கிக் கொள்கிறார் அமலா பால். அவரது அந்த நிலைமைக்கு யார் காரணம்? அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை.

அமலா பால் தைரியமாக இந்த கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்கான நியாயத்தையும் தன் நடிப்பின் மூலம் செய்திருக்கிறார். அதைப்போலவே படத்தின் பிற்பாதியில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த 'ரகசிய’ கேரக்டரின் நடிப்பு அபாரம். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் மூன்றையும் அத்தனை பாராட்டலாம். படத்தின் தரத்தை மிக அழகாக ஏற்றியிருக்கிறார்கள்.

சமீபத்தில் 18+ காமெடி என்ற பெயரில் வெளிவந்து நம்மை தொல்லை செய்த பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆச்சரியமான விதத்தில் இந்தப் படம் அதில் ஜெயிக்கிறது. எல்லா காமெடியும் அத்தனை ரியலாக இருக்கிறது, அதனாலேயே ரசிக்கவும் வைக்கிறது.

'மேயாத மான்' திரைப்படத்தின் மூலமாக பெரும் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ரத்னகுமார். உறவுகளுக்கு இடையேயான உணர்வுகளை மிக அழகாகப் பதிவு செய்ததே அவரின் அந்த வெற்றிக்குக் காரணம். ஆனால் இதில் அந்த உணர்வுகளுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என நினைத்திருக்கிறார். அது பெரும் சறுக்கலையே தந்திருக்கிறது.

"மார்பக வரி" என்ற வரலாற்றின் மிக முக்கியமான, கண்டிப்பாக பேசவேண்டிய ஒரு விஷயத்தை கையில் எடுக்கிறார். ஆனால் அதை எவ்வாறு கையாளுகிறார் எனப் பார்க்கும்போது நிறைய பிரச்னைகள் இருப்பதாகவே தெரிகிறது. இதேபோல் தான் பெண் சுதந்திரம், நிர்வாணம், prank ஷோ, நுழைவுத் தேர்வுகள் என பல விஷயங்களை பேச நினைத்திருக்கிறார். ஒரு திரைப்படம் சமூக அக்கறையோடு இருப்பதே போதுமானது தான். சமூகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் பேசியே தீருவேன் என நினைப்பது அவசியமற்றது. அப்படி செய்வது தவறில்லை, அது உங்கள் படத்தின் கதையையும், படம் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை குலைக்காத வரையில்.

மொத்தத்தில் தொழில்நுட்ப ரீதியில் மிகத் தரமான பின்புலத்தை வைத்துக்கொண்டு, ஒரு நல்ல முற்போக்கான கதைக்களத்தையும்
கையில் எடுத்து, அதீத பிற்போக்குத்தனத்தைப் போதிக்கிறார்.