Cinema

ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்தது ஏன்? - சாய் பல்லவி விளக்கம்! 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் வளர்ந்துவரும் கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை சாய்பல்லவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தின் ரெளடி பேபி பாடல் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மே 30ம் தேதி வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை சாய் பல்லவியிடம், ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து சாய் பல்லவி கூறியதாவது,

“எனது தங்கை என்னை விட சற்று நிறம் குறைவாக இருப்பாள். அவ்வப்போது, இருவரும் கண்ணாடி முன்பு நிற்கையில், என்னுடைய நிறத்தை பார்த்து என் தங்கைக்கு தாழ்வு மனப்பான்மை வந்தது. அதனை போக்குவதற்காக காய்கறி மற்றும் பழ வகைகளை உண்ணுமாறு கூறினேன். ஏனென்றால், பெரும்பாலும் பர்கர், பீட்சா போன்ற ஜங்க் உணவுகளையே எடுத்துக்கொள்வார். அதனால் காய்கறி, பழங்களை சாப்பிட ஆரம்பித்தாள். நிறவேற்றுமையை உருவாக்குவதில் எனக்கு அபிப்ராயம் இல்லை” என தெரிவித்தார்.

மேலும், “பிரேமம் திரைப்படத்தின் போது கூட மேக் அப் போன்று ஏதேனும் செய்யவேண்டுமா என இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனிடம் கேட்டேன். எனக்குமே தாழ்வு மனப்பான்மை இருக்கும் பட்சத்தில் எப்படி நான் இன்னொரு பெண்ணுக்கு சொல்ல முடியும் என்பதை கருத்தில் கொண்டே ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரங்களில் நடிப்பதற்கு மறுத்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சாய்பல்லவியின் அந்த பேட்டி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.