தமிழ்நாடு

ஆதிதிராவிட மகளிர், இளைஞர்களை முதலாளிகளாக்கிய புரட்சி திட்டம்... - முதலமைச்சருக்கு மக்கள் நன்றி!

1,303 ஆதிதிராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கி அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் புதிய சாதனை படைத்துள்ளது.

ஆதிதிராவிட மகளிர், இளைஞர்களை முதலாளிகளாக்கிய புரட்சி திட்டம்... - முதலமைச்சருக்கு மக்கள் நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்திட உறுதி பூண்டுள்ளார். அதற்காக, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் கருதிப் பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்.

​அதிலும் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, முதலமைச்சர் ஆழ்ந்த சிந்தனையுடன், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” எனும் புதிய திட்டத்தை 2023 – 2024ஆம் ஆண்டு மே திங்களில் அறிவித்து, அத்திட்டத்திற்கு ரூ.100 கோடி அனுமதித்தார். ​இந்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் பட்டியல் இன மற்றும் பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான திட்டமாகும்.

​அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், திட்டத்திற்கான தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது; அத்துடன், 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. ​இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஆதிதிராவிட, பட்டியலின மக்களிடையே வளர்த்திட மாவட்ட அளவிலும், கிராமங்கள் அளவிலும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

ஆதிதிராவிட மகளிர், இளைஞர்களை முதலாளிகளாக்கிய புரட்சி திட்டம்... - முதலமைச்சருக்கு மக்கள் நன்றி!

​அவற்றின் பயனாகப் பட்டியலின-பழங்குடியின இளைஞர் களிடமிருந்து தொழில்கள் தொடங்குவதற்காக இணையத்தின் மூலம் மொத்தம் 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 7,365 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

​ஆதி திராவிட இளைஞர்களுக்கு ஊக்க மளிக்கும் வகையில் கடந்த நிதியாண்டில் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன், இணையம் வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுக்திகள், வரவு செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின்கீழ் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன்கள் பெற்று ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பலர், பல்வேறு தொழில்களைத் தொடங்கித் தொழில் முதலாளிகள் ஆகியுள்ளனர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகள் இத்திட்டத்தின் வெற்றியை முழங்குகின்றன. அவற்றுள் சில;

ஆதிதிராவிட மகளிர், இளைஞர்களை முதலாளிகளாக்கிய புரட்சி திட்டம்... - முதலமைச்சருக்கு மக்கள் நன்றி!

=> சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற்ற திருமதி எஸ். அஞ்சலி :-

“நான் நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்க எண்ணியிருந்தேன். தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் பற்றி அறிந்தேன். பின்னர், சிவகங்கை மாவட்டத் தொழில் மையம், அலுவலகம் சென்று எனது நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்குவது குறித்துத் தெரிவித்தேன்.

அதனைத்தொடர்ந்து, இணையதளம் வாயிலாக இத்திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.32,70,000 வங்கி கடன் பெற்று, அதற்கு 35 சதவீத மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் பெற்றுத் தொழில் தொடங்கினேன். தற்போது 10 பணியாளர்கள் எனது நார் இழை பைகள் நெய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இதன்மூலம் மாதம் 4 இலட்சம் ரூபாய் வருவாயும், ரூ.70,000/- இலாபமும் பெறுகிறேன்.

இத்திட்டம் என்னைப்போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளித்து எங்கள் வாழ்க்கையையே மாற்றி வருகிறது. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”-- என்று பெருமிதத்துடன் கூறினார் திருமதி அஞ்சலி.

ஆதிதிராவிட மகளிர், இளைஞர்களை முதலாளிகளாக்கிய புரட்சி திட்டம்... - முதலமைச்சருக்கு மக்கள் நன்றி!

=> தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முகவரான சந்தோஷ்கவின் என்ற ஆதிதிராவிட இளைஞர் கூறுவது:

“தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தேன். தூத்துக்குடி மாவட்டத் தொழில் மைய அலுவலகம் மூலம் ரூ.1 கோடியே 96 லட்சத்து 92 ஆயிரம் வங்கிக் கடன் கிடைத்தது. அதில், 35 சதவீதத் தொகையான 60 லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய் எனக்கு மானியமாக அரசிடம் இருந்து வந்தது.

இந்த நிதியைக் கொண்டு தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினேன். தீப்பெட்டிகள் விற்பனையில் எனக்கு மாதம் ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. என்னுடைய தொழில் நிறுவனத்தில் 15 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கியுள்ளேன். அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஓர் அருமையான திட்டத்தைக் தொடங்கி ஆதி திராவிட சமுதாய இளைஞர்களைத் தொழில் முதலாளிகளாக உயர்த்தும் மகத்தான தலைவர் முதலமைச்சர் அவர்களை நன்றியுடன் வணங்குகிறேன்.” - என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories